Tuesday, June 14, 2022

பெரியார் தமிழின எதிரியா ?








சமீபத்தில் யூ ட்யூபில் சீமானிய தமிழ்த் தேசியர்களின் சேனலான பேசு தமிழா பேசுவில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த அருண் துரை என்பவரை பேட்டி கண்டிருந்தார்கள்.

அந்தப் பேட்டியை பார்த்ததும் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

பேட்டியானது திராவிட இயக்கத்தை 'அம்பலப்படுத்துவோம்' என்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. 

திகவின் வழக்கறிஞர் அருண் துரை நிதானமாகவே பேசினார். தமிழ்த்தேசிய தம்பிகள் அளவுக்கு புள்ளி விவரங்களை அவர் தரவில்லை தான். ஆனால் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்கையும், திராவிட இனக்குழு என்பது வேறு என்பதையும், இன்று தமிழ்த் தேசியம் திராவிடத்தை எதிரியாகச் சித்தரிக்கிறது என்பதையும் தெளிவாகவே சொல்லி, அப்படிச் செய்யாதீர்கள் அது இனவெறி வெறுப்பு வாதத்தை நோக்கியே செல்லும் என்றும் அறிவுறுத்தினார்.

அருண் துரையை நோக்கி பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று எந்த வருடம் கேட்டார் சரவணன், தமிழ்நாடு திராவிடருக்கே என்று எந்த வருடம் மாற்றினார், மொழிவாரிக் கோரிக்கை முதன் முதலில் எழுப்பியது தெலுங்கர்கள், 1909லேயே கேட்டுவிட்டார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கு அருண் துரை பதிலளிக்கவில்லை என்றதும் அவரை முட்டாளாக்கி நிறுத்தி சந்தோஷப் பட்டுக் கொண்டனர் பேசு தமிழா பேசுவினர்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த ஆண்டு எது என்றால் நான் இணையத்தில் தேடிப் பார்த்து தான் 1956 என்று சொல்லுவேன். அவ்வளவு தான் எனது மனதில் பதிந்த புள்ளி விவரங்கள்.  ஆனால் வரலாறை முழுவதுமாக தேதி வாரியாக நியாபகம் வைத்திருப்பது முக்கியமல்ல. அந்த வரலாறு எதை நோக்கியது என்கிற அறிவை வரலாற்றிலிருந்து நாம் எந்தெந்த விஷயங்களை கருத்தில் கொண்டு பெறுகிறோம் என்பதும் முக்கியம்.


உதாரணமாக விடுதலைப் புலிகளை ராஜீவ் காந்தியின் படுகொலையிலிருந்து எடுத்துப் பார்ப்போம். அது புலிகள் செய்தனரா  என்பதே கேள்வி. முன்னாள் புலியாக இருந்த சிவராசன் சிஐஏ கைக்கூலியாக செயல்பட்டு அந்த அரசியல் படுகொலையைச் செய்தான் என்பது போன்ற தகவல்களை விட்டுவிட்டு பாஜக புலிகளை பயங்கரவாதிகள் என்று எப்படி இன்றும் முத்திரை குத்த முடிகிறது ? குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றில் ஒருவரை ஹீரோவாகவோ வில்லனாகவோ இன்று மாற்றி விட முடியும். புலிகளும், காஷ்மீர் தீவிரவாதிகளும் இப்படி வில்லனாக மாற்றப்பட்டவர்கள் தான்.

அத்தகைய தகவல் தொழில்நுட்ப உலகில் நாம் இருக்கிறோம். விரல் நுனியில் லட்சக்கணக்கான தகவல்களை நாம் பெற முடியும். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்டிவிட முடியும். இந்தப் பேட்டியில் அது போன்ற ஒரு முத்திரை குத்துதல் விஷயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தான் பல திராவிட எதிர்ப்பு விஷயங்களும் இவர்களால் கையாளப்பட்டிருக்கும் என்பது உறுதி.

இச்சேனலில் பிரதான ஊடகவியலாளராக பேட்டி எடுக்கும் மகிழன் என்பவர் ஒரு தமிழ்தேசிய அறிவு ஜீவியாக இங்கே புகழப்படுகிறார். அவரும், சரவணன் என்னும் இளைஞரும் துடிப்பாக கேள்விகள் கேட்டதை, குறிப்பாக, சரவணன் அருண் துரையை கேள்வி கேட்டதற்கு திராவிட முகமூடியை கிழித்ததாக பின்னூட்டத்தில் பாராட்டி சந்தோஷப்படுபவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள வேண்டும். 

எவ்வளவோ புத்தகங்களை எடுத்துப் படித்த மகிழனும், சரவணனும் அதைப் பயன்படுத்தும் விதம் அறிவியல் பூர்வமாக இல்லை.

திராவிடம் என்பது தீது. அது தமிழை அழிக்கவே உருவாகியது. 

இந்த முன்முடிவோடு வரலாற்றைப் படிப்பதும், அதிலிருந்து நூறு ஆதாரங்களைத் திரட்டுவதும், அதை வைத்து கேள்விகள் கேட்டு, திராவிடம் தமிழருக்கு துரோகம் செய்தது, தமிழ்த்தேசியமே சிறந்தது என்பது போன்ற தோற்றம் காட்ட நினைப்பதும் வஞ்சகமான நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்கிறது. அறிவை நோக்கிய தேடலாக இல்லை.  இது ஆராய்ச்சி செய்யச் செல்பவர் முதலில் முடிவை ரெடி பண்ணி வைத்து விட்டு அப்புறம் அதற்கேற்ற தகவல்களாக தேடுவது போல இருக்கிறது. கொலையை இவன் தான் செய்திருப்பான் என்று முடிவு செய்துவிட்டு பின்பு அதற்கென்று ஆதாரங்களை ரெடி பண்ணுவது போலத் தான் நீங்கள் செய்வதும் இருக்கிறது.

திராவிடம் என்பது ஒரு இனக்குழு அடையாளம். 

பின்பு அந்தப் பெயர் ஒரு சமூக அரசியல் இயக்கமாக உருவெடுக்கும் போது பயன்படுத்தப்பட்டது. அந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதன் நோக்கம் ஆரம்ப கால மதராஸ் மாகாணத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பல மொழி பேசுபவர்களும் இருந்ததால். இப்படி  வெவ்வேறு மொழி பேசுபவர்களும் மொழி வேற்றுமையைத் தாண்டி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கமே திராவிடம் என்கிற சமூக இயக்கப் பெயராக அமையக் காரணம். சரி உங்களுக்கு திராவிடம் என்று பெயர் வேண்டாம் அது தமிழம் என்று தான் வந்திருக்க வேண்டும் என்கிறீர்களா. சரி வைத்துக் கொள்ள வேண்டியது தான். பிரச்சனை தீர்ந்தது. அதை விடுத்து திராவிடம் என்பது தீரா விடம் என்பது போன்று அதன் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையுமே  திட்டமிட்ட சதி என்ற கதையாடல் தான் நெருடுகிறது.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான பெரியாருக்கு கன்னடரை முன்னிலைப் படுத்த வேண்டும் என்று கூட தோன்றியிருக்கலாம். பெரியார் ஒரே சீராக சிந்தித்தார் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நிலை நிறுத்த முயல்வார்கள். அருண் துரை கூட அப்படித் தான் பேசினார்.  ஆனால் அது உண்மையல்ல தானே. அவர் ஒரு மனிதர். பல வகையான காலச்சூழலில் வெவ்வேறு வகையான முடிவுகளை அவர் எடுத்திருக்கிறார்.  

பெரியார் தீவிர மொழிப் பற்றாளர் இல்லை. ஒரு கட்டத்தில் வெள்ளையன் நம்மை ஆளட்டும் எனவே வீட்டில் எல்லோரும் ஆங்கிலம் பேசுங்கள். அவனது கலாச்சாரத்தை பின்பற்றினால் நம் எல்லோரும் சாதி ஏற்றத் தாழ்விலிருந்து வெளியேறிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். சுதந்திரமடைந்த இந்தியாவில் திராவிட நாடு என்று ஒரு பெரும் பகுதியாக ஆரியர் அற்ற பகுதியாக ஹிந்தி பேசாத தென்மாநிலங்களை பிரித்துக் கொள்ளலாம் என்று கருதியிருக்கிறார்.  கீழ் வெண்மனியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய மக்களை இவன்கள் ஏன் போராடுகிறான்கள் என்று இழிவாகக் கேட்டிருக்கிறார். அதே பெரியார் பிற்காலத்தில் தெளிவு பெறுகிறார். திராவிட நாடு என்ற கருத்தில் மொழி வாரியாகப் பிரிந்த மாநிலங்கள் சுயநலமோடு பிரிந்து போனதை வருத்தமாகத் தெரிவிக்கிறார்.  அதன் பின் தனித் தமிழ்நாடு என்று பேசி, இந்தியா மாநிலங்களோடு சுதந்திரம் தரப்பட்டதை பிராமண ஆதிக்கத்திடமே மீண்டும் மாட்டிக் கொண்டோம் என்று எதிர்த்தார். 


பெரியாருடைய நோக்கமெல்லாம் பார்ப்பனீய எதிர்ப்பு, கடவுள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமத்துவம், சமூக நீதி, பெண்ணியம் என்ற விஷயங்களை மையமாகக் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் பல இடங்களில் தனது நிலை பிறழ்ந்த முடிவுகளை எடுத்தவராக இருந்திருக்கிறார். எல்லோரும் இந்தி பேசுங்கள் என்றெல்லாம் கூட சொல்லியிருக்கிறார். அவர் பிறழ்ந்த இடங்களை வைத்து அவரை எதிரி என்று முடிவு செய்யக் கூடாது.


பெரியாரின் பிறழ்வுகளையெல்லாம் எடுத்து அவரை ஆய்வு செய்து இன்று விலாவரியாகப் பேச நேர்ந்திருப்பது தமிழ் தேசிய அமைப்புக்களால் தான். இது ஒரு நல்ல விஷயம். பெரியார் மாபெரும் தலைவர் தான். அவரும் தவறான பல முடிவுகளை எடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்வது நிச்சயம் வரலாற்றுத் தெளிவுக்கான விஷயம் தான். திராவிட மாடல் பேசுபவர்கள் தங்களது கடந்த காலத் தவறுகளையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். பெரியார் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை என்று மறுதலிப்பது சரியல்ல. அது பூசி மெழுகி பெரியார் ஹீரோ என்பதாக நிலைநிறுத்த மட்டுமே பயன்படும். பெரியார் ஹீரோ தான். தவறு செய்யாத ஹீரோ அல்ல. தவறுகள் பல செய்த ஹீரோ தான்.


இதையெல்லாம் தெரிந்தும் நான் அவரை வெறுக்கவில்லை. அவரது வாழ்வின் போராட்ட நோக்கத்தில் குறை காணவில்லை. பெரியாரே பொய்யென்று சொல்ல விரும்பவில்லை. நீங்கள் அப்படி சொல்ல விரும்புகிறீர்கள். அதாவது பெரியார் ஹீரோவே அல்ல அவர் ஒரு பயங்கரமான வில்லைன் என்று எதிரான விஷயத்தை நிறுவ முயல்கிறீர்கள். அதன் மூலம் திராவிடம் என்கிற அடையாளத்தை அழிப்பதே சீமானின் தமிழ் தேசிய தம்பிகளின் முதல் மற்றும் முற்றான அறிவியல் ஆய்வாக இருக்கிறது. 


அப்படி ஒரு முன்முடிவோடு வரலாற்றை அனுகினால் நீங்கள் ஆயிரம் புத்தகம் படித்தாலும் அறிவு வெளிச்சம் பெறமுடியாது. மாறாக சீமானிசம் என்பதன் இனவெறிப் பக்கங்களுக்கு பல புதிய தகவல்களை திரட்டித் தருபவர்களாகவே நீங்கள் சுருங்கிப் போவீர்கள்.


திராவிட இயக்கம் ஒன்றாக இருந்த மொழிவாரி மாநிலங்கள் காலத்தில் தொடங்கி, அவை தம்தம் மொழியே தமக்குப் பெரிது என்று குறுகிய மனப்பான்மையோடு போன பின்பும் திராவிட இயக்கமாக தமிழ்நாட்டில் தொடர்ந்தது. ஏன் ? தமிழன் இளிச்சவாயன் என்று அர்த்தமல்ல.

தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை இயல்பாகவே உள்ளுணர்ந்தவன் என்பதால்.


உங்கள் நோக்கம் திராவிட இயக்கத்தின் மூலவரான பெரியாரின் பிம்பத்தை உடைப்பது. அதன் மூலம் திராவிடம் பொய் என்று நிருவுவது. அதைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு வரலாறைப் பாருங்கள். எந்த ஒரு சமூக இயக்கமும் பொய்களாலேயே கட்டப்பட்டு காலம் காலமாக நிலவி வர முடியாது. திராவிடம் திட்டமிட்டு பொய்யாகக் கட்டப்பட்டு உருவானது என்பது மிகைப்படுத்தலான வெறுப்பு வாதத்தின் வெளிப்பாடே.


பெரியாருக்குப் பின்பு வந்த அண்ணா, கலைஞர் போன்றவர்கள் சமூக இயக்கமாக இருந்த திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்கள். அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.


அப்படி தமிழக அதிகாரத்தை கைப்பற்றியது  ஆரியரல்லாத ஒரு இடைத்தர சாதி இனக்குழு. தமிழர் தான் அவர்கள். என்றாலும் இடைச்சாதி என்று இங்கே குறிப்பிடக் காரணம், ஆரியம் என்ற உயர் சாதியினரிடமிருந்து விடுதலை பெற போராடக் கிளம்பி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தவர்கள் இடைநிலைச்சாதியினரே. தலித்துக்கள் அல்ல.


எனவே திராவிடம் என்பது சாதீய நோக்கில் பார்த்தால் இடைநிலைச் சாதியினரின் அதிகாரக் கைப்பற்றலாகக் கருதலாம். அதனால் விளைந்த நன்மைகள் தான் அனைவருக்கும் கல்வி, வேலை என்கிற சமூக கோட்பாட்டின் படி தாழ்த்தப்பட்டவர் வரை அனைவருக்கும் கல்வியும், வேலையும், சமூக அடையாளமும் பெற்றுத் தரப்பட்டது.


அதே சமயம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிட இயக்கம் தனது கொள்கைகளிலிருந்து பெருமளவு சமரசம் செய்து கொள்ளவும் செய்தது. அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். கலைஞர் அறிஞராக திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு ஓரளவு உயிரூட்டினாலும், அவர் காலத்தில் வந்த கார்ப்பரேட் உலகில், சுயநலமிக்க அரசியல்வாதியாக சீரழிந்து போனதில் ஈழத்தில் நம் இரத்த உறவுகளையே அதிகாரத்திற்காக காட்டிக் கொடுக்கும் நிலைக்குப் போனார். 


இது திராவிட மாடல் மெது மெதுவே சீரழிந்து வந்து கடைசியில் முடிந்து போன வரலாற்றைக் காட்டுகிறது. சமூக நீதிக் கோட்பாட்டிலிருந்து பணம் சம்பாதிக்கும் அரசியலாக திமுக சுருங்கிய போதிருந்தே அதன் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இப்போது ஸ்டாலின் திராவிட மாடல் என்பது செத்த பாம்பிற்கு உயிர் கொடுப்பது போலத் தான். கட்சியில் உள்ள பெரும்பான்மை தொண்டர்கள் ஊழல் மிகுந்தவர்களாகவும், சமத்துவக் கொள்கை என்றால் என்ன என்று கூடத் தெரியாதவர்களாகவும், ரவுடிகளாகவும், பொறுக்கிகளாகவும் இருப்பதே திராவிட மாடலின் இன்றைய பலவீனமாந நிலைக்குச் சான்று. 


இவர்களை எல்லாம் அம்பலப்படுத்துவதில் தமிழ்த்தேசியம் தன்னை மெருகேற்றிக் கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் கலைஞர் செய்த துரோகத்திலிருந்து பின்னோக்கி ஆரம்பித்து திராவிடமே துரோகம் என்கிற முதிர்ச்சியற்ற வரலாற்றுப் பார்வையே இந்தக் கார்ப்பரேட் உலகில் மாறிக் கொண்ட இந்துத்துவா பாசிசத்தின் எடுபிடியாளாக தமிழ்த்தேசியர்களை போய் நிறுத்திவிடும் என்று எண்ண வைக்கிறது.


இந்துத்துவா பாசிசம், ராஜீவை அழிதத்தன் மூலம் காங்கிரஸை அழித்தது. பார்ப்பனீயம் இப்போது பாஜகவாக ஆட்சியில் அமரந்துவிட்டது. அடுத்து அது தமிழ்நாட்டில் ஆட்சி பெற முதலில் அங்கே இருக்கும் பிரதேச அரசியல் போக்கை காலி செய்ய வேண்டும். அதற்கு  எதிரெதிரான இரு குழுக்களை எடுத்து, அதில் ஒன்றை மறைமுகமாக ஆதரித்து இன்னொன்றை வீழ்த்துவது. இருவரில் ஒருவர் வீழ்ந்த பின், அந்த இன்னொருவரை அதிகார பலம் கொண்டு எளிதில் வீழ்த்துவது.


இத்தகைய அரசியலை வடமாநிலங்கள் பலவற்றிலும் பாஜக பின்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மேவங்கத்தில் மம்தா பானர்ஜீ கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டு கம்யூனிஸ்ட்டுகள் அழிக்கப்பட்டார்கள். இனிமேல் மம்தாவை அழிப்பது பாஜகவுக்கு பெரிய காரியமல்ல. ஜெகன்மோகன், கேஜ்ரிவால், பஞ்சாப் ாண் ஆத்மி என்று இன்னும் வரிசையாக பாஜகவின் புதிய பி டீம்களை அடுக்கலாம்.


அதில் தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பது நாதகவோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. ஏனெனில் புதிய தமிழ்த்தேசியர்களின் போக்கு ஆரியத்தை விட திராவிடம் தான் முக்கிய எதிரி, அதாவது துரோகி என்பதாக வழிகாட்டுகிறது. ஆரியத்தை விட திராவிடம் தீது என்கிற இடத்தில் தான் பாஜகவின் போர்த் தந்திரத்திற்கு தமிழ்த் தேசியர்கள் பலியாகி விட்டதாகக் கருத வேண்டியிருக்கிறது.


வரலாற்றுப் பார்வையில் மிக முற்போக்கான சீர்திருத்தக் கொள்கைகள் கொண்ட திராவிடம் வழக்கொழிந்து அழியப் போகும் நிலையில் அதன் அடுத்த கால் தடமாக தமிழ்த்தேசியம் உருவாகியுள்ளது என்று முன்வைக்கும் போது தான் தமிழ்த்தேசியத்திற்கான வரலாற்றுத் தொடர்ச்சி முழுமை பெறும்.


இது தான் நான் நாதக அறிவு ஜீவி தம்பிகளுக்கு சொல்ல விரும்புவது. நன்றி.

Sunday, March 6, 2022

அப்பாவின் கனவில் அம்மா.


 

போன மாதம் ஒரு நாள் 

அப்பா திடீரென்று சொன்னார்.

அம்மாவை எரித்திருக்கக் கூடாதுடா என்று.


ஏன்ப்பா என்று கேட்டேன்.


என் கனவில் 

அவ வரவே மாட்டேன் என்கிறாள் 

என்றார்.


அப்பா சொன்னது உண்மையாக இருக்கலாம்.


என் கனவிலும் அம்மா

வரவேயில்லை.

------------------

Sunday, August 1, 2021

சென்னை பயணிகள் செல்லும் மின்சார ரயில்களை வேண்டுமென்றே காவு கொடுக்கும் திமுக அரசு



சென்னையில்  ஒரு நாளைக்கு 10 லட்சம் ஏழை, நடுத்தர மக்கள் போகிற எலெக்ட்ரிக் ட்ரெய்ன்கள்ல, வேணும்னே ஆண்கள் இந்தந்த டைம்ல போகமுடியாது என்று சொல்லி கண்டிஷன் மேல் கண்டிஷனா போட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல போற மக்கள் வயிற்றில் அடிக்கிறாங்க திமுக அரசு. 

மின்சார ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் டிக்கெட். போகவர 10 ரூபாய் தான் ஆகும். இப்போது அப்படி முடியாது. ரிட்டர்ன் டிக்கெட் தர மாட்டார்கள். ரிட்டர்ன் வரும்.நேரம் ஆண்கள் அனுமதிக்கப்படும் நேரமாக இருந்தாலே மட்டுமே டிக்கெட் கிடைக்கும். வழக்கம் போல  பெண்கள் மட்டும் போகலாம்னு சொல்வாங்க. அப்போ ஆண்களும் பெண்களுமாக குடும்பமாகப் போனால் அவ்வளவு தான் தொலைஞ்சீங்க.

கேட்டா கொரோனாவாம். காரணம் சொல்றாங்க.

இதே நேரத்தில்தான், மெட்ரோ ட்ரெய்ன்களில் நல்லா புல்லா ஏசி போட்டுட்டு நாள் பூரா எல்லாரும் தாராளமா போகலாமாம். அங்கே மட்டும் கொரோனா வரவே வராதாம். மெட்ரோவில் குறைந்த பட்ச ஒன்வே டிக்கட் மட்டுமே 30 ரூபாய். போய வரனும்னா 60.ரூபாய். 

படிச்ச மிடில் க்ளாஸ் மக்கள், படு கூட்டமாக நிரம்பி வழிந்து செல்லும் பஸ்களில் போக முடியாத நிலையில், இந்த மெட்ரோ ரயில்களில், வேற வழி இல்லாமல் போறாங்க. தினசரி ரெகுலராக போகும் செலவு அதிகம்.
5 ரூபாய் கொடுத்து எலெக்ட்ரிக் ரயில்களில் போன மக்கள் இனி 20-30 ரூபாய் கொடுத்து போகனும் ஒவ்வொரு தடவையும்.

சென்னையில், ஒரு நாளைக்கு 2-3 லட்சம் பேர் தான் அதிக பட்சம் மெட்ரோவுல போறாங்க. ஆனால், எலெக்ட்ரிக் ரயிலில் போறவங்க ஒரு நாளைக்கு பத்து லட்சம் பேர்.

இப்படி ஏன்யா ஏழை மக்கள் போற ட்ரெய்ன்களை கவர்மென்ட் பஸ் மாதிரி அழுக்கா அசிங்கமாக வெச்சுருக்கீங்கன்னு யார் கேக்குறது ?

புதுசா தரைக்கடியில் தோண்டி பாதைகள் போடுறாங்க. பெரும் செலவு. ஏற்கனவே இருக்கிற மின்சார ரயில்கள் இருக்கும் போது  எதுக்கு வெட்டிச் செலவு பண்றீங்கன்னு யாரும் கேக்கறதில்லை. மெட்ரோ ட்ரெய்ன்களுக்கு வருஷா வருஷம் நானூறு கோடி பட்ஜெட்டில் ஒதுக்கி செலவு புதுசா செய்றாங்க. 

ஆனால் பாமரர்கள் செல்லும் மின்சார ரயில்களுக்கு ? பட்ஜெட்டில் பேச்சே இல்லை. எலெக்ட்ரிக் ட்ரெய்ன்களையும் ஏழைகள் மாதிரி அழுக்காவே ஓட்டுறானுங்க.

எடப்பாடி ஆட்சில தான் இப்படின்னு பாத்தா, விடியல் தரும் ஸ்டாலின் ஆட்சியும் அதே கதை தான்.

நாங்க தான் மெட்ரோ இங்கே கொண்டு வந்தோம்னு பெருமை வேற பேசுவாங்க திமுககாரங்க.



இதில் ஒரு வினோதம் என்னன்னா மின்சார ரயில்கள் போகும் அதே பீச்-தாம்பரம் வழித்தடத்தில் , அதே சென்ட்ரல்-எண்ணூர் வழித்தடத்தில் தான் மெட்ரோ ரயில்களின் வழித்தடமும் இருக்குது..இதற்கு என்ன பொருள் ? கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் ரயில்களை காலி செய்து மக்களை மெட்ரோவை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்க முன்கூட்டியே ப்ளான் போடப்பட்டது போலவே இருக்கிறது.

ஸ்டாலினிடம் இதையெல்லாம் கேட்டால்  மின்சார ரயில் ஒன்றிய அரசின் கீழ் வருதுன்னு சொல்லி ஈசியா தப்பிப்பாரு. மெட்ரோவுக்கு மாநில அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து தான் பட்ஜெட் திட்டம் போடுறாங்க.

மெட்ரோ ரயில்களை படிப்படியாக தனியார் மயமாக்கும் வேலையும் நடந்து வருகிறது. ரயில்வேயையே தனியாருக்கு விக்கிறவங்க இதை மட்டும் விட்டுடுவாங்களா ? திமுக  அரசும் இதில் உடந்தை. ஜிஆர்டி, முத்தூட் என்று பெரிய போர்டுகள் வைத்து விளம்பரமா , இல்லை ரயில் நிலையத்தின் பெயரே இதுதானா என்று புரியாத அளவிற்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒவ்வொரு தனியார் நிறுவனப் பெயரை தாங்கி நிற்கின்றன. எல்லாம் தனியார் மயம். 

இதுதான் திமுக ஆளும் லட்சணம். கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படாமல் திமுகவோ , ஸ்டாலினோ மாநில.ஆட்சியில் நீடிக்கவே முடியாது. கூர்ந்து  பார்த்தால் இந்த உண்மை தெரியவரும்.

 MRTS என்று பீச் முதல் வேளச்சேரி வரை ஓடும் பழைய மெட்ரோ ரயில்களின், ரயில் நிலையங்களின் நிலை காயலான் கடைபோலத்தான்.

இனி, ஏற்கனவே 10 ஆயிரம் பிச்சைச் சம்பளம் வாங்குகிற உழைக்கும் மக்கள்  அதில் கால்வாசியை மெட்ரோவில் வேலைக்கு போய் வர பாஸ் , டிக்கெட்டுக்கு கட்டி அழவேண்டும்.

சென்னை எலெக்ட்ரிக் ரயில்கள் மெது மெதுவாக விரைவில் அழிக்கப்படும். டில்லி மின்சார ரயில்களுக்குக் கூட இதே நிலைமைதான் என்று கேள்வி.

இன்றைக்கு எலெக்ட்ரிக் ட்ரெய்னில போய்விட்டு வந்து தான் இதை எழுதுகிறேன்.

தொழில் தொடங்குவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் தமிழ்நாடு வல்லரசாகிவிடும் என்று நினைக்கும் முதல்வர் எப்படி தனியாரை பகைத்து மின்சார ரயிலையே நம்பி போகும் சாமான்ய மக்களுக்கு நல்லது செய்வார் ? 

அதிமுக சொல்ல வேண்டாம் , அது.பாஜக அடிமை. ஆனால் திமுகவும் கண்டிப்பாக மின்சார ரயிலுக்கு உயிர் தர மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

ஏனென்றால் ஏழைகள் மின்சரா ரயில்களில் போனால் என்ன போகாவிட்டால் யாருக்கு என்ன ? அவர்களால் இந்த அரசுக்கு ஒரு புண்ணியமும் இல்லையல்லவா ?

31-7-2021
அம்பேதன்.

Thursday, March 4, 2021

சகாயம் ஐஏஎஸ்..!! பாஜகவின் மற்றுமொரு பகடைக்காய்.



இவ்வளவு வருடங்கள் அரசியல் வேண்டாமென்றிருந்த சகாயம் ஐஏஎஸ் திடீரென்று கொடி பிடித்து அரசியலுக்கு ஏன் வருகிறார் ?
அவருக்கு பின்புலமும் பணமும் திடீரென்று ஒரே நாளில் எப்படி கிடைத்தது ?

கமல்ஹாசனின் மநீமவுக்கு எப்படி திடீரென பணம் கிடைத்ததோ அப்படித்தான்.

சகாயத்தின் பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால், அவரது புதிய கட்சி அறிவிப்பு பேச்சு உட்பட, அவர் ஊழல் மட்டுமே தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை போல பேசுவதை கவனிக்கலாம். மற்றபடி நேர்மை , எளிமை , கருமை தான் அவருக்குத் தெரிந்த வார்த்தைகள்.

நீட் , விவசாய சட்டங்கள் , டீமானடைசேஷன் , பெட்ரோல் விலை உயர்வு, மதவெறி பாஜக, உழவர்கள் போராட்டம், இவையெல்லாம் சகாயம் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை ? கவனித்துப் பாருங்கள். இனியும் அவர் கண்ணுக்கு இவை தெரியாது. சகாயம் ஐஏஎஸ் பதவியில் இருந்த 6 வருடமும் ஊழல் மிகுந்த அதிமுகவாலும் , பாஜகவாலும் ஓட ஓட விரட்டப்பட்டவர். தூக்கியடிக்கப்பட்டவர். ஆனால் இன்று அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னும் அவர் தன்னை துன்புறுத்திய இந்தக் கட்சிகள் பற்றி வாயே திறக்கவில்லை. ஏன் ? பயமா ? எஜமான விசுவாசமா ? மோடிக்கோ, பாஜகவுக்கோ எதிராக இன்றுவரை சகாயம் ஒரு வார்த்தை பேசவில்லை.

வடக்கில் அன்னா ஹாசாரே என்கிற காந்தியவாதி காங்கிரஸ் ஊழல் மட்டுமே இந்தியாவின் பெரும் பிரச்சினை என்று பேசினாரே நியாபகம் வருகிறதா ? அதில் பாஜக ஆதாயம் அடைந்ததே. இப்போது அதே அன்னா ஹாசாரே ஏன் பேசவில்லை ? மோடி ஆட்சியில் ஊழலே இல்லையா என்ன ? எக்கச்சக்கமாய் இருக்கிறது. நம் சகாயம் இன்னொரு ஹசாரே முகம்.

சகாயமும் , கமலஹாசனும் , அண்ணாமலை ஐபிஎஸ்ஸும் பாஜகவின் 'போலியான நேர்மை முகம்' காட்டும் பகடைக்காய்கள்.

தேர்தல் நேரத்தில் EVMல் குளறுபடிகள் செய்ய பாஜகவுக்கு மேலும் சில புதிய குட்டிக் கட்சிகள் தேவை.

ரஜினி , கமல் , சகாயம், சரத்குமார் என்று பலரும் களமிறக்கப்படுவார்கள். எதற்கு ? இவர்களால் ஓட்டுக்கள் பிரிந்துவிட்டன என மக்களை நம்பவைப்பதற்கு மட்டுமே. தேர்தல் முடிவுகளில், ஒரு தொகுதியில் ஜெயிக்கவேண்டிய நபர் பாஜக கூட்டணியாக இல்லாவிட்டால் அங்கே EVM குளறுபடிகள் ஆரம்பமாகும்.

EVMல் பித்தலாட்டங்கள் செய்து, ஜெயிக்கும் நபரின் ஓட்டுக்கள் இந்த புதிய நேர்மையாளர்களுக்கு, அதாவது 'நல்லவர்'களுக்கு பிரித்து போடப்படும். பாஜக சார்பு வேட்பாளருக்கு இவர்கள் எல்லாரையும் விட கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக ஓட்டுக்கள் விழும்படி போடப்படும்.

இன்று புதிதாய் அரசியலுக்கு வந்த சகாயமும், கமலும் 40 ஆயிரம் ஓட்டுக்கள் ஒரு தொகுதியில் திடீரென வாங்கினால் நீங்கள் சந்தேகப்படுவீர்களா ? மாட்டீர்கள் தானே ?

ஆம். நேர்மையாளர் சகாயம் 40 ஆயிரம் ஓட்டு வாங்குகிறார் என்பது நம்பி விடக்கூடிய ஒரு விஷயம் தான். அந்த நம்பகத்தன்மைதான் EVM மோசடி செய்ய தேவையான விஷயம்.

இப்படி இந்த நேர்மையாளர்களோடு சேர்ந்து பாஜகவின் முதல்வர் வேட்பாளர், ஆட்டுக்குட்டி மேய்ப்பாளர் அண்ணாமலைக்கு 40 ஆயிரத்து ஐநூறு ஓட்டுக்கள் விழுகின்றன என்று கொள்ளுவோம். 500 ஓட்டுக்கள் தானே அதிகம்? இதுவும் நம்பக்கூடியதாக மாறிவிடும் இல்லையா ? ஐபிஎஸ் அதிகாரி , ஊழலை ஒழிப்பவர் etc etc .

இவர்கள் எல்லோரும் சேர்ந்து அத்தொகுதியில் பல வருடங்களாக சேவை செய்து வரும் , வெற்றி பெறும் வாய்ப்புள்ள, பெரிய , மாநில (ஊழல்?) கட்சியின் வேட்பாளரின் ஓட்டுக்களை ஆளுக்கு 40 ஆயிரம் பிரித்துவிட்டார்கள் என்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (EVM) சொல்லும். இப்படி ஓட்டுக்கள் பிரிந்த நிலையில் ஜெயிக்கப்போகும் மாநிலக் கட்சியின் வேட்பாளரை விட வெறும் 501 ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாகப் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார்.

இதுதான் மக்கள் நம்பவைக்கப்படும் தேர்தல் முடிவு.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், EVM மூலம் தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றாலும் , மக்கள் அதை நம்பும்படியாக செய்யவேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய நோக்கம்.

ஏனெனில் EVM ஐ, அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை, மக்கள் நம்பவில்லை என்றால் சகாயமோ , கமலோ , ரஜினியோ அரசியலுக்கு வந்து பாஜகவுக்கு பிரயோசனமே இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் , இப்படித் தோன்றும் திடீர்த் தலைவர்கள் யாரும் மக்கள் நம்பிக்கையை உடனே ஓட்டுக்களோ , வெற்றியோ பெற்றதேயில்லை.

எனவே தேர்தல் நேரத்தில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய மின்மினிகள் நீங்கள் நினைப்பது போல விண்மீன்களல்ல. இவர்கள் ஆளும் பாஜக நடத்தப் போகும் EVM தில்லுமுல்லுகளை தேர்தல் முடிவுகளில், ஓட்டுக்களை பிரித்துப் போட்டு விளையாடப்படும் விளையாட்டை மறைத்து, தேர்தல் நேர்மையாக நடந்ததாக நம்பவைக்க பலியிடப்படும் 'நேர்மையான' வெள்ளாடுகள்.

இந்த வெள்ளாடுகள் தேர்தல் முடிந்தவுடன், அன்னா ஹாசாரே போல, காற்றில் கரைந்து மறைந்து போவார்கள்.

பாஜக நடத்தும் இந்த தேர்தல் ஆட்டத்தில் சகாயம் போன்ற நல்லவர்களுடன், இந்த நல்லவர்கள் மேல் நன்மதிப்பு கொண்ட பல லட்சம் அப்பாவி இளைஞர்களும், பாஜகவின் கருவேப்பிலையாக உபயோகப்பட்டு வீணாகப் போவார்கள். அடுத்த 5 வருடங்கள் பாஜகவின் கையில் சிக்குண்டு தமிழகம் சின்னாபின்னமாகும்.

இந்த தேர்தல் சதுரங்க வேட்டையை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஒருவேளை சீமான்,சகாயம் , கமல் , ரஜினி போனறோர் அடுத்த ஐந்தாண்டுகள் ஊழலை எதிர்த்து , பாஜகவையும் எதிர்த்து போராடி நிற்பார்கள் எனில் அப்போது போய் சகாயத்துடன் இணைந்து நில்லுங்கள்.

இப்போது தமிழகத்தின் மாநிலக் கட்சிகள் பெரும்பான்மை சீட்டுக்கள் வெற்றி பெறுவதைத் தடுக்கும் நோக்குடன், தேர்தல் வர இருக்கும் இந்த ஒரு வருடத்திற்குள் தோன்றியிருக்கும் இந்த திடீர் புரட்சியாளர்களை நம்பாதீர்கள். ஓட்டுப் போடாதீர்கள்.

அப்போதுதான் இவர்களை முன்னிறுத்தி செய்யப்படப் போகும் பாஜகவின் EVM மோசடிகளை நாம் தோற்கடிக்க முடியும்.

இன்றைய தேர்தல் தேவை பாஜகவை உள்ளே நுழையவிடாத ஒரு மாநில எதிர்க்கட்சியின் கையில் அதிகாரம் செல்வதே.

--- அம்பேதன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.